குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் கொடியேற்றத்துடன் வெகு விமரிசையாக ஆரம்பமான மகோற்சவப் பெருவிழா!

குப்பிளான் கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் கொடியேற்ற நிகழ்வு இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. 

பெருந்திரளான மக்கள் இன்றைய திருவிழாவில் கலந்து கொண்டனர். வெளிநாடுகளில் இருந்தும் இலங்கையின் ஏனைய பகுதிகளில் இருந்தும் வந்திருந்த ஏராளமான குப்பிளான் வாழ் மக்கள் கலந்து கொண்டனர்.



வரலாற்று சிறப்பு மிக்க குப்பிழான் கற்கரை கற்பக விநாயகர் மகோற்சவம் 04-08-2011 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமானது. சிவசஸ்ரீ கி.வைத்தீஸ்வர சிவாச்சாரியர் தலைமையில் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமானது.

காலை 5.00 மணிக்கு திருப்பள்ளி எழுச்சியுடன் பூசைகள் ஆரம்பமானது. அபிசேக ஆராதனைகள் நடைபெற்று அதன் பின்னர் வசந்த மண்டப பூசைகள் நடைபெற்றன, அதனைத் தொடர்ந்து கொடிக்கம்ப பூசைகள் நடைபெற்று பகல் 10.00 மணிக்கு கொடியேற்றம் இடம்பெற்றது.




அதன் பின்னர் எம்பெருமான் உள்வீதி, வெளி வீதி வழியே திருவுலா வந்தார். அடியார்கள் தோழினில் சுமந்தபடி உள் வீதி, வெளி வீதி சுற்றி வந்தனர். எம்பெருமான் அலங்கரிக்கப்பட்டு வீதி உலா வந்த அந்த அற்புத காட்சியை அடியார்கள் கண்டு கூதூகலித்தனர்.

அதன் பின்னர் மஞ்சம் வெள்ளோட்டத்துக்கு விடப்பட்டது. அடியார்கள் மஞ்சத்தை இழுத்துக்கொண்டு வீதி உலா வந்தனர். முதன்முறையாக இம்முறை 5ம் திருவிழாவை மஞ்ச திருவிழாவாக செய்ய ஏற்பாடாகியுள்ளது.



ஆலயத்தின் 5ம் திருவிழாவை செய்யும் அடியார்களால் சுமார் 20லட்சம் செலவில் மஞ்சம் செய்யப்பட்டு முதன் முதலாக வெள்ளோட்டம் விடப்பட்டது. இதனை வடிவமைத்தவர் திரு இராசரட்ணம் ஆச்சாரியார்.


ஆரம்ப காலங்களில் 5ம் திருவிழா என்பது மிகவும் சிறப்பாக கொண்டாடப்படும் திருவிழா ஆகும். இந்த திருவிழா ஆனது 80களின் ஆரம்பம் வரைக்கும் மிகவும் சிறப்பாக நடைபெற்று வந்தது.



நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகளால் தற்போது வரையும் நடைபெறவில்லை. இத்திருவிழா ஆனது வீதி எங்கும் வர்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு, தென்இந்தியாவில் இருந்து பாடகர்கள், பேச்சாளர்கள் அழைக்கப்பட்டு இரவிரவாக நடைபெறும் திருவிழா.

இந்த திருவிழாவை பற்றி இன்னும் சொல்லிக்கொண்டு போகலாம். அந்த திருவிழாவை காலம்காலமாக செய்யும் அடியார்களால் இந்த மஞ்சம் அமைக்கப்பட்டது.


வெள்ளோட்டம் முடிவுற்று அடியார்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டு கொடியேற்ற திருவிழா இனிதே முடிவுற்றது. அடியார்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இம்முறை வெளிநாடுகளில் இருந்து பெருமளவான பக்தர்கள் வருகை தந்துள்ளனர். முதல் நாளே சுமார் 50 இல் இருந்து 60 குடும்பங்களை காண கூடியதாக இருந்தது. தேர் திருவிழா அன்று மேலும் பலர் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





 
Make a Free Website with Yola.