கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தில் மாபெரும் திருட்டு... 


கற்கரைக் கற்பக விநாயகர் ஆலயத்தில் மாபெரும் திருட்டுச் சம்பவம் ஒன்று நேற்றிரவு இடம்பெற்றுள்ளது...

இன்று காலை ஏழு மணியளவில் விநாயகருக்கு காலைப் பூசைகளை செய்யச் சென்ற பூசகர் ஆலயத்தினுள் நகைகள் காணாமல் போயுள்ளதைப் பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளார்...

தெய்வத்தின் சிலைகள் புரட்டப்பட்டு அதன் கீழிருந்து ஏராளமான நகைகள் திருடப்பட்டுள்ளதாகவும் தெரிய வந்துள்ளது... 


ஆலயத்தினுள்ளும் வெளியிலும் சப்பாத்துக்கால் தடங்கள் இருப்பதும் அவதானிக்கப்பட்டுள்ளது...

குறித்த சம்பவம் தொடர்பாக தற்போது பொலிஸாரிடம் ஆலய நிர்வாகத்தினர் முறையிட்டுள்ளனர்...

நகைகளையும் தவிரவும் பல பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாகவும் தெரிய வருகின்றது... 

தற்சமயம் சம்பவத்தைக் கேள்விப்பட்டு ஏராளமான குப்பிளான் கிராமமக்கள் ஆலயத்தினை சூழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்... 


பலரது முகங்களிலும் அதிர்ச்சியும் சோகமும் நிரம்பியுள்ளது... 

குப்பிளான் கிராமமக்களின் குல தெய்வத்தின் மீதே கைவரிசையைக் காட்டி இருக்கிறார்கள் திருடர்கள்..

சம்பவ தினம் கற்கரைக் கற்பக விநாயகனின் தீவிர பக்தர்கள் பலர் கண்ணீர் விட்டு கதறி அழுததைக் காணக் கூடியதாக இருந்தது...

பிந்திய தகவல்...

* திருட்டுச் சம்பவம் இடம்பெற்ற மறுநாளான சனிக்கிழமை சம்பிரோட்சன கும்பாபிசேகம் (பிராயச்சித்தம்) ஆலயத்தில் இடம்பெற்றுள்ளது...



* திருடப்பட்ட இயந்திர தகடுகளுக்கு பதிலாக உடனடியாக புதிய தகடு வைக்கப்பட்டு கும்பாபிசேகம் இடம்பெற்றது. சம்பிரோட்சன கும்பாபிசேகம் 24 மணி நேரத்தில் செய்யப்படவேண்டும். இந்த கும்பாபிசேகத்தின் செலவு 1 லட்சம் ரூபாயாகும்.



* வருடாந்த உற்சவம் எதுவித இடையூறுகள் இல்லாமல் இடம்பெறுவதற்காகவே மேற்படி சம்பிரோட்சன கும்பாபிசேகம் (பிராயச்சித்தம்) இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது...


இன்றைய தினக்குரல் பத்திரிகையில் வெளியான செய்தி... 12-06-2011

குப்பிளான் கற்பக விநாயகர் ஆலயத்தில் பத்து லட்சம் ரூபா பொருட்கள் திருட்டு வெள்ளியிரவு துணிகரச் சம்பவம்...


குப்பிளான் வடக்கு கற்கரை கற்பக விநாயகர் ஆலயத்தில் நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை இரவு பாரிய திருட்டுச் சம்பவம் இடம் பெற்றுள்ளது.

ஆலயத்தின் கூரையைப் பிரித்து உள்நுழைந்த திருடர்கள் மூலஸ்தான விக்கிரகம் உட்பட ஆலயத்திலுள்ள விக்கிரகங்களிலிருந்த பெறுமதியான ஆபரணங்களையும் விக்கிரகத்தை புரட்டி அடியிலிருந்த இயந்திரத் தகடுகளையும் அபகரித்துச் சென்றுள்ளனர்.


சுமார் 10 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் இங்கு திருடப்பட்டுள்ளன.
விக்கிரகங்களின் பீடத்திற்குக் கீழ் வைக்கப்பட்டிருந்த பெறுமதிமிக்க இயந்திரத் தகடுகளை எடுப்பதற்கான முயற்சியில் ஈடுபட்ட திருடர்கள் சுவாமி விக்கிரகங்களை புரட்டி வீழ்த்திவிட்டுச் சென்றுள்ளனர்.


சம்பவ தினம் இரவு ஆலயத்திற்கு அண்மையிலுள்ள மக்கள் அனைவரும் உறங்கிய பின்னர் ஆலயக்கூரையைப் பிரித்து உள்ளே நுழைந்த திருடர்கள் நீண்ட நேரம் உள்ளே நின்று திருட்டில் ஈடுபட்டுள்ளனர்.


விக்கிரகங்களில் அணியப்பட்டிருந்த வெள்ளி அங்கிகள், ஆபரணங்கள் போன்றவற்றைத் திருடியபின் அலவாங்குகளைப் பயன்படுத்தி விக்கிரகங்களின் பீடங்களை உடைத்து அதன் கீழ் வைக்கப்படிருந்த இயந்திரத் தகடுகளையும் திருடியுள்ளனர். இதன் போது விக்கிரகங்கள் புரட்டி விழ்த்தப்பட்டுள்ளன.


ஆலய உண்டியல் உடைக்கப்பட்டு அதற்குள்ளிருந்த 10 ஆயிரம் ரூபா வரையிலான பணமும் எடுக்கப்பட்டுள்ளது. இதன்பின் திருடர்கள் வடக்கு வாயில் கதவை உடைத்து வெளியேறிச் சென்றுள்ளனர்.


இதேநேரம் ஆலயத்திற்கு சற்றுத்தொலைவிலுள்ள பனை மரத்திடியிலிருந்து திருடர்களின் இரண்டு துவிச்சக்கர வண்டிகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் அந்த இடத்தில் அலவாங்கு ஒன்று கிடந்ததாகவும் அப்பகுதி கிராம முகாமையாளர் தெரிவித்தார். இரண்டு சைக்கிள்களையும் அலவாங்குகளையும் பொலிஸார் கொண்டு சென்றுள்ளனர்.

இதேவேளை ஆலயத்திற்கு அருகில் வசிக்கும் ஒருவர் தனது இரண்டு துவிச்சக்கர வண்டிகள் சம்பவ தினம் இரவு திருடப்பட்டுள்ளதாக சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளாரென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

முன்செல்ல 

 
Make a Free Website with Yola.